October 25, 2018
தண்டோரா குழு
பாலியல் புகார் கூறிய நடிகை சுருதி ஹரிகரனுக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு நடிகர் அர்ஜூன் மானநஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளார்.
கடந்த சில தினங்களாக சமூக ஊடங்களில் #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள்,குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன.ஹாலிவுட்டில் பிரபலமாக துவங்கிய இந்த விவகாரம் தற்போது இந்தியாவில் டிரெண்டாகி வருகிறது.
தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்தார்.எனினும் இந்த குற்றச்சாட்டினை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயாராக உள்ளதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்.இவரைத்தொடர்ந்து நடிகர் ராதாரவி,நடன இயக்குநர் கல்யாண்,பிரபல பாடகர் கார்த்திக்,இயக்குநர் சுசி கணேசன் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இதற்கிடையில்,பிரபல கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜுன் மீது பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார்.நடிகர் அர்ஜூன் உடன் ‘விஸ்மயா’ என்னும் திரைப்படத்தில் நடித்த போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.இதையடுத்து,சுருதி ஹரிகரன் புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூன் தனது முகநூல் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து இருந்தார்.”நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்தது இல்லை.சுருதி ஹரிகரன் புகாருக்கு பின்னால்,வேறு யாரோ இருக்கிறார்கள்” என்று அவர் விளக்கமளித்து இருந்தார்.
இந்நிலையில்,நடிகர் அர்ஜூன் தமது திரையுலக வாழ்வில் பெற்ற பெயருக்கும்,புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில்,குற்றம்சாட்டிய நடிகை சுருதி ஹரிகரனுக்கு எதிராக பெங்களூர் நகர் சிவில் நீதிமன்றத்தில் ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.மேலும்,அர்ஜூனின் மருமகன் துருவா சர்ஜா இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.