December 18, 2018
தண்டோரா குழு
99 சதவீத பொருட்களை 18 சதவீத ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் கருத்தரங்கம் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்,
பல ஆண்டுகளாகவே நாட்டிற்கு ஜிஎஸ்டி வரி முறை தேவையாக இருந்தது.அதை அமல்படுத்தியதன் மூலம் வர்த்தகச் சந்தையில் இருந்த இருந்த முரண்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. பொருளாதாரமும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாறியிருக்கிறது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதற்கு முன்னர் 65 லட்சம் நிறுவனங்கள் மட்மே பதிவு செய்திருந்தன. ஆனால், தற்போது, இந்த எண்ணிக்கையில் 55 லட்சம் அதிகரித்துள்ளது.
பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்கள் உள்ளிட்ட, 99 சதவீத பொருட்களை 18 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாத்தியமான அளவுக்கு வணிக நிறுவனங்களுக்கு மிகவும் சுமூகமான முறையாக ஜிஎஸ்டி முறையை மாற்ற வேண்டும் என்பதே அரசின் கருத்து. புதிய இந்தியாவை கட்டமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.