October 29, 2018 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.
சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியத்துக்கு பதிலாக காலமுறை ஊதியமாக வழங்க வேண்டும்.ஓய்வு பெறும் போது மொத்த தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.தமிழக அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.சமையலர் மற்றும் உதவியாளரை முதல்வர் காப்பீடு திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கடந்த 25ம் தேதியில் இருந்து 27ந் தேதி இரவு வரை சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று கோவை வந்த முதலமைச்சரிடம் மனு கொடுத்தும்,கோரிக்கைகளை மாநில அரசு பரிசீலிக்கவில்லை.இதனையடுத்து தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.போரட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.