June 2, 2020
தண்டோரா குழு
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட நேரு உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கத்தில் இரண்டு மாதத்திற்கு பின் வீரர், வீராங்கனைகள் தங்கள் விளையாட்டு பயிற்சிகளை மீண்டும் துவங்கினர்.
உலகையே அச்சுறுத்திய கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைகளின்றி பொதுமக்கள் வெளியே வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் கோவையின் முக்கிய விளையாட்டு பயிற்சி மையமான நேரு விளையாட்டு அரங்கம் மூடப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டு வெரிச்சோடியே காணப்பட்டது. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டதால் இரண்டு மாதங்களுக்கு பின் நேரு உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கங்கள் மீண்டும் செயல்படத்துவங்கியது.
அதிகாலையிலேயே வந்த வீரர், வீராங்கனைகள் தங்கள் வழங்கமான பயிற்சிகளை நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் துவங்கினர். குறிப்பாக கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து பயிற்சி, அதே போல் குத்துச்சண்டை, போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து மாணவர்கள் கூறும்போது,
இரண்டு மாதங்கள் போதிய பயிற்சி இல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தோம் தற்போது மாநகராட்சியில் நேரு விளையாட்டு அரங்கம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டதால் மீண்டும் பயிற்சியை துவங்கியது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தனர்.
இரண்டும் மாதங்களுக்கு பின் நேரு விளையாட்டு அரங்கில் வீரர், வீராங்கனைகள் பயிற்சிகளை செய்து வருவதன் மூலம், வெரிச்சோடி காணப்பட்ட கோவை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது.