April 8, 2019 தண்டோரா குழு
சென்னை சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்தின் தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
சென்னை போரூர் பகுதியை சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்தாண்டு பிப்ரவரி 6-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் தஷ்வந்த் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது. ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். தனிப்படை அமைத்த தமிழக போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தது. பின் மும்பையில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார்.
சிறுமி ஹாசினி கொலை வழக்கு தொடர்பான விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி எனவும் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை வழங்கியும் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தஷ்வந்த் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்துக் கொன்ற வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
இதையடுத்து, தனக்கு விதித்த தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், இவ்வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உள்ளது.