September 16, 2019
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதை கண்டித்து கோவையில் பல்வேறு மாணவர் அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த தேர்வுகளைத் திரும்ப பெறக்கோரி, பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலை கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தினேஷ்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பத்து வயது குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது ஏற்புடையது அல்ல எனவும், மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கு பதிலாக தேர்வு என்னும் வன்முறையை திணிக்காதே, இடைநிற்றலை திட்டமிட்டு உருவாக்காதே உள்ளிட்ட முழக்கங்களை மாணவர்கள் எழுப்பினர்.
இதேபோல டவுன்ஹால் அருகில் உள்ள கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை அனைத்திந்திய மாணவர் பெறுமன்றத்தினர் திங்களன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மாணவர் பெருமன்ற மாநில தலைவர் குணசேகர், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் வசந்தகுமார் தலைமையில் 5 மற்றும் 8 ஆம்வகுப்பு பொதுத்தேர்வு என்கிற அரசின் நடவடிக்கையை கண்டித்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது. முன்னதாக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அதைப்போல்,கோவை மாவட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாலை 5.30 மணியளவில் மாவட்ட தலைவர் அபுதாஹிர் தலைமையில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கேம்பஸ் ஃப்ரண்டின் மாநில பொதுச்செயலாளர் க. அஷ்ரப் சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள், மாணவர்கள் , பொதுமக்கள் பங்கேற்றனர்.