February 20, 2019
தண்டோரா குழு
மத்திய அரசின் அறிவுறுத்தல்படி தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்தாண்டே நடத்தப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிகல்வித்துறை இயக்குநர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது போன்று, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடதுவதற்காக மத்திய அரசு விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. முதலில் இந்த விதிமுறைப்பு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தற்போது அதற்கு மத்திய அரசின் முடிவிற்கு செவிசாய்த்துள்ளது.
இதனை தொடர்ந்து மத்திய அரசின் ஆலோசனைப்படி 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை செய்து வருகிறது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை தற்போது சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டே பொதுத்தேர்வை நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.
அதில் “5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை. தனியார் பள்ளியில் பயிலும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.50 தேர்வு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு மாணவர்கள் ரூ.100 தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2 மணிநேரம் நடைபெறும்” என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.