January 28, 2019 தண்டோரா குழு
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களில், 5% சதவீதம் பேர் பணிக்கு திரும்பி உள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 21 மாத நிலுவை தொகையினை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களை எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பணி அமர்த்த கூடாது என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று 7வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அலுவர்களை மீண்டும் பணிக்கு அனுப்ப ஏராளமான முயற்சிகளை எடுத்து வருகிறது.
மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 7-வது நாள் வேலை நிறுத்தத்தால் அரசு பணிகள், பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளை மூடிவிட்டு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஒரு சில இடங்களில் ஆசிரியர்கள் வராததால் மாணவர்கள் மட்டுமே பாடம் நடத்தும் நிலை இருந்து வருகிறது. வேலைக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என தமிழக தலைமை செயலாளர் ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில், போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்பாத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை கமிஷனரும் எச்சரித்துள்ளார்.
இதனையெடுத்து இன்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு காலக்கெடு நிர்ணயித்தது. இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களின் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பயிற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு எச்சரித்தது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களில், தற்போது வரை 5 சதவீதம் பேர் பணிக்கு திரும்பி உள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 450 ஆசிரியர்களின் இடங்களுக்கு, பணியிட மாறுதல் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.