June 25, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தை சேர்ந்த கால்நடை வளர்ப்போர்கள் மற்றும் விவசாயப் பெருமக்கள் கால்நடைகளுக்கு ஏற்படும் அசாதாரண இறப்பினை ஈடுசெய்யும் வகையில், கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்திட அருகில் உள்ள கால்நடை மருத்துவ நிலையங்களை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது:
கால்நடைகளுக்கு ஏற்படும் அசாதாரண இறப்பினை ஈடுசெய்யும் வகையில், தேசீய கால்நடை இயக்க திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 2020-2021 ஆம் ஆண்டில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 3900 கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்வதற்கு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின கால்நடை வளர்ப்போருக்கு 70 சதவீதம் மானியத்திலும், வறுமை கோட்டிற்கு மேலுள்ள கால்நடை வளர்ப்போருக்கு 50 சதவீதம் மானியத்திலும் காப்பீடு செய்து கொள்ளலாம். 8 ஆண்டு வயதுடைய கறவை பசுக்கள், எருமைகள் மற்றும் முதல் 3ஆண்டுகள் வயதுடைய வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கு இத்திட்டத்தில் காப்பீடு செய்யப்படும். அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய மானியம் வழங்கப்படுகிறது.
ஒரு குடும்பத்தில் 5 கால்நடைகளுக்கு இத்திட்டத்தில் காப்பீடு செய்து கொள்ளலாம். ஆர்வமுடைய கால்நடை வளர்ப்போர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவ நிலையங்களை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.