February 5, 2019 தண்டோரா குழு
கொல்கத்தாவில் கடந்த 3 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை மம்தா பானர்ஜி வாபஸ் பெற்றார்.
ரோஸ் சிட்பண்ட்ஸ், சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க அவருடைய இல்லத்திற்கு நேற்று முன்தினம் சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்திருப்பதாகக் கூறி சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தவிட்ட கொல்கத்தா போலீஸார், அவர்களைக் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், மத்திய அரசுக்கு, சிபிஐ அமைப்புக்கு எதிராகவும் நேற்று முன்தினம் இரவு முதல் முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையம் முன் “ஜனநாயகத்தைக் காப்போம்” என்ற பெயரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார். இதையடுத்து அவருடைய தர்ணா போராட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்களான பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, ராஜீவ்குமாரை விசாரணைக்கு ஒத்துழைக்கக் கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமார் ஒத்துழைக்க வேண்டும், அதேசமயம், அவரைக் கடுமையாக நடத்தக்கூடாது, கைது செய்யக்கூடாது என்று சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் தற்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது தர்ணாவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு அவரது தர்ணாவை சுமூகமாக முடித்து வைத்துள்ளார்.