May 6, 2019 தண்டோரா குழு
அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு எதிராக சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது.
அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. ரத்தின சபாபதி, விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஆகியோர் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாகவும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கூறி அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, சபாநாயகர் தனபால் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கிடையில், சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி, திமுக சார்பில் பேரவை செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதனிடையே, 3 எம்எல்ஏ-க்கள் மீதான நடவடிக்கைக்கு தடைகோரி, அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தின சபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சபாநாயகர் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தார். தொடர்ந்து இது குறித்து விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.