November 10, 2018 தண்டோரா குழு
2.0 வெளியாகும் திரையரங்குகள் முன் போராட்டம் நடத்துவோம் என வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன்.இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 எனும் பெயரில் தற்போது உருவாகியுள்ளது.இந்த படத்தில் எமி ஜாக்ஷன்,அக்ஷய் குமார் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில்,கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பிற மொழி படங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த கோரி கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூரு சிவானந்த சர்க்கிளில் உள்ள கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அலுவலக கட்டிடம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“பிற மொழி படங்கள் கர்நாடகத்தில் வெளியிடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் 29-ந் தேதி வெளிவருகிறது.இதற்காக கர்நாடகத்தில் அனைத்து திரையரங்குகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிடும்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 2.0 படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பாக கன்னட கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்துவோம்” என கூறியுள்ளார்.