November 7, 2017
தண்டோரா குழு
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தீர்ப்பு இன்னும் எழுதப்படாததால் தீர்ப்பு தேதி டிசம்பர் 5 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்தியில், காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது, 2007 – 2009 வரை, மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக, தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா இருந்தார்.
அப்போது, மொபைல் போன் சேவைகளுக்கான, ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக, சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இதனால், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது.இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வந்தது. இந்த ஊழலில் நடந்துள்ள பண மோசடி குறித்து, மத்திய அமலாக்கத் துறை தனியாக விசாரித்தது.
இந்த வழக்குகளை, டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி விசாரித்து வந்தார். இந்தாண்டு ஏப்ரலில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தன.
இதைத்தொடர்ந்து வழக்கு தொடர்பாக அதிக ஆவணங்களை பரிசீலிக்க வேண்டி இருப்பதால், தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்படுவதாக, நீதிபதி சைனி கூறியிருந்தார்.
இதையடுத்து, கடந்த மாத இறுதியில் நடந்த விசாரணையின்போது, தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா, கனிமொழி ஆகியோர் ஆஜராயினர். ஆனால், தீர்ப்பில் பல ஆவணங்கள் சேர்க்கப்பட வேண்டி இருந்ததால், தீர்ப்பு வழங்குவது தாமதம் ஆனது.
எனினும், நவ., 7ல், தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்றும், ராஜா, கனிமொழி, சிறையில் உள்ள சஞ்சய் சந்திரா, கரீம் மொரானி உள்ளிட்ட, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று, ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என நாடே எதிர்பார்த்தது. ஆனால் தீர்ப்பு இன்னும் முழுமையாக தயாராக வில்லை எனவும் வழக்கின் தீர்ப்பு தேதி டிசம்பர் 5ம் தேதி அறிவிக்கப்படும் என சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்தார்.