• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

108 ஆம்புலன்ஸ் சேவையை கேள்விப்பட்டிருப்பீர்கள் 515 கணேசன் கார் சேவையை கேள்விபட்டிருகிறீர்களா?

March 7, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடந்தால் முதலில் அந்த இடத்திற்கு வந்து நிற்கும் வாகனம் 108 ஆம்புலன்ஸ் சேவை தான். அந்த அளவிற்கு 108 ஆம்புலன்ஸ் சேவை விரிவடைந்துள்ளது.

நாம் இதுவரை பெரும்பாலும் 108 ஆம்புலன்ஸ் சேவை கேள்விப் பட்டிருப்போம் ஆனால், 515 கணேசன் இலவச கார் சேவையை பற்றி கேள்விபட்டிருக்கிறோமா? தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் ஆலங்குடியில் இருந்துகொண்டு மகத்தான மக்கள் சேவை செய்துகொண்டிருக்கிறார் கணேசன். வயது 70-ஐத் தாண்டியும் தனது அம்பாசிடர் கார் மூலம் ஒரு ஆம்புலன்ஸ் போலவே சேவையை செய்து கொண்டிருக்கிறார்.

யார் இந்த 515 கணேசன் ?

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ஆலங்குடி. அங்கு சாதாரண பிளாஸ்டிக் கூரை வேய்ந்த எளிமையான வீட்டில் வசித்து வருகிறார் கணேஷன். ஊரில் இறங்கி கணேஷன் என்றால் யாருக்கும் தெரியாது  515…என்றால் உடனே அடையாளம் தெரிந்துகொள்கிறார்கள். அந்த அளவிற்கு அவரது 515 பேமஸ். நேரம் காலமெல்லாம் பார்க்கமால் உதவினு யார் கேட்டாலும், காரை எடுத்துக்கிட்டுக் உதவி செய்ய கிளம்பிவிடுவாராம். அக்கம்பக்கத்துல இருக்குற புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை ஊருங்க மட்டும் இல்லை. சில சமயங்களில் வெளி மாநிலங்களுக்குக்கூட செல்வாராம்.  இதுமட்டுமின்றி கையில் காசு இல்லை’னு சொன்னா, எனக்குப் பணம் முக்கியம் இல்லை’ம்பாரு. அவர்கிட்ட இருக்குற பணத்தைச் செலவு செஞ்சு உதவி செய்வாராம் 515 கணேஷன்.

515 சேவை எப்படி ஆரம்பித்தது என்று சொல்கிறார் கணேஷன் :

ஆலங்குடிதான் எனக்குச் சொந்த ஊர். அப்பா ஒரு மாட்டுத் தரகர். என் சின்ன வயசுலயே அப்பா, அம்மா இறந்துவிட்டார்கள். அதன்பின் நானாக ஏதேதோ வேலை பார்த்து, கொஞ்சம் கொஞ்சமா முன்னேறினேன். வாழ்க்கையில முன்னேறிக் காண்பிச்சவங்க எல்லாருக்குமே மனைவிதான் உதவியா இருப்பாங்க. எனக்கும் என் மனைவி தெய்வானைதான் எல்லாமே. எங்களுக்கு அஞ்சு பெண் குழந்தைகள் எல்லாருக்கும் கல்யாணமாகிடுச்சு…’

1968-ம் வருடம் ஒரு நாள் நான் ரோட்டில் நடந்து போய்க்கிட்டு இருந்தேன். அப்போது ஒருத்தர், தன்னோட மனைவியை ஒரு தள்ளுவண்டியிலவெச்சு தள்ளிக்கிட்டுப் போய்க்கிட்டிருந்தாரு. ஏன்னு பார்த்தப்போதான் தெரிஞ்சுது… அந்தப் பொண்ணு நிறைமாத கர்ப்பிணினு. என் மனசு உடைஞ்சு போயிடுச்சு. வீட்டுக்கு வந்து, என் மனைவி தெய்வானைகிட்ட விஷயத்தைச் சொன்னேன். `இந்த மாதிரி இருக்கறவங்களுக்கு உதவறதுக்கு ஏதாவது பண்ணணும்’னு என் ஆதங்கத்தையும் சொன்னேன். அதற்கு என் மனைவி உங்களால் முடியுமா ? என்று கேட்டார். `முடியும்’னு சொல்லி நான் வைத்திருந்த பழைய இரும்புக்கடையை விற்றேன். 17,500 ரூபா கிடைச்சுது.

அந்தப் பணத்த்தில் செகண்ட் ஹேண்ட்ல ஒரு அம்பாசிடர் கார் வாங்கினேன். அந்த காரோட நம்பர் TNZ-515. நான் முதன்முதல்ல வாங்கின காரோட நம்பரையே `515 இலவச சேவை கார்’னு பேரா வெச்சேன். `உதவி’னு கேட்குறவங்களுக்கு, நேரம் காலம் பார்க்காம காரை எடுத்துட்டுப் போய் என்னால ஆனதைச் செய்றேன் என்றார்.

கணேஷன் கிட்டத்தட்ட 46 வருடங்களாக இந்தச் சேவையைச் செய்துவருகிறார். அதற்காக யாரிடமும் பணம் வாங்குவதில்லை. காருக்கு டீசல் போடுவது, அது ரிப்பேர் சரி பார்ப்பது… என அனைத்துச் செலவுகளையும் அவரே பார்த்துக்கொள்கிறார். கார் சேவைக்கு வேளை வராத நேரத்தில், பழைய இரும்பு, தகரம் போன்ற பொருள்களை வாங்கி விற்கும் கடை நடத்துகிறார். இதுவரை 19 அம்பாசிடர் கார்களை வாங்கியிருக்கிறார் கணேசன். ஒரு கார் பழுதாகிவிட்டது, இனி ஓடும் கண்டிஷனில் இல்லை என்று தெரிந்ததுமே அடுத்த காரை வாங்கிவிடுவார். எல்லாமே செகண்ட் ஹேண்ட் கார்கள்தான். அத்தனைக்கும் `515’தான் பெயர்.  அவரேதான் முதலாளி, அவரேதான் டிரைவர்.!  இந்த 515 சேவை மூலம் கணேஷன் இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளை பிரசவத்துக்கு ஏற்றிச் சென்றிருக்கிறார், விபத்துக்கு ஆளான நான்காயிரத்துக்கும் மேற்பட்டோரைச் காப்பற்றி இருக்கிறார்.

இதுமட்டுமின்றி பணம் இல்லாமல், சடலத்தை ஊருக்குக் கொண்டு போக முடியாமல் தவிப்பவர்களுக்கும் இவரது கார் உதவி இருக்குமாம்.  இலவசமாக!  இதுவரை 5,400 சடலங்களை பல ஊர்களுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறது. கொச்சின், பெங்களூரு, தூத்துக்குடி  என கணேசன் பயணித்த ஊர்கள் பல உள்ளதாம்.

பெத்த புள்ளைக்கு அஞ்சு ரூபா தர்றதுக்கு யோசிக்கிற இந்தக் காலத்துல இப்படியும் ஒரு மனிதர் அவரது இந்த சேவையை நாம் நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.

மேலும் படிக்க