November 21, 2019
தேசிய அளவில் ஹாக்கி போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி மாணவர்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டினார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு பகுதியில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மாணவிகள் பிரிவினர் வாரணாசியில் உள்ள டாக்டர் அம்ரிட் லால் இஸ்ரத் நினைவு சன்பீம் பள்ளியில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் கலந்து கொண்டனர். சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையே நடந்த இறுதிப்போட்டியில் கர்நாடக மாநிலம் குடகு பாரதிய வித்யா பவன் பள்ளி மற்றும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி ஆகிய பள்ளிகள் மோதின. இதில் 3 க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி வெற்றி பெற்று 2019 ஆம் ஆண்டிற்கான சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. தென்னிந்தியாவில் முதல்முறையாக இந்த விருதை பெற்றுள்ளனர்.
இதில் இப்பள்ளியின் வர்ஷினி என்ற மாணவி சிறந்த முன் ஆட்ட வீராங்கனை என்ற பட்டத்தையும், தனுசியா என்ற மாணவி சிறந்த தடுப்பாட்ட வீராங்கனை என்ற பட்டத்தையும் பெற்றனர். இப்பள்ளியின் 17 வயதுக்குட்பட்ட மாணவர் அணி தென் மண்டலம் ஒன்றில் முதலிடம் பிடித்த தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் மூன்றாம் இடத்தை பெற்றது. இதில் ஸ்ரீராம் என்ற மாணவர் சிறந்த முன் ஆட்ட வீரர் என்ற பட்டத்தை பெற்றார்.
இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் அனைவரும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். தொடர்ந்து தேசிய அளவில் சாம்பியன் பட்டம் பெற்ற மாணவர்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெகுவாகப் பாராட்டினார். மேலும் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத், பள்ளியின் செயலாளர் கவிஞர் கவிதாசன் மற்றும் அரசு அதிகாரிகள் மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.