July 2, 2020 தண்டோரா குழு
கோவையில் இருந்து சொந்த நாட்டுக்கு செல்ல தமிழக அரசு உதவ வேண்டும் என இலங்கையைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் சந்திர மோகனா, பாஸ்கரன் தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்காக கடந்த டிசம்பர் மாதம் அவரது தாயார் காந்திமதியுடன் கோவைக்கு வந்துள்ளனர். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறார். கொரொனா பிரச்சனை காரணமாக விமானம் இல்லாததால், ஸ்ரீலங்கா செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்தார்.
இவர் ,கோவை புலியகுளம் பகுதியில் தனது தாயாருடன் 5000 ரூபாய்க்கு வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருவதாகவும், போதிய நிதி வசதியில்லாததால் கஷ்டப்படுவதை பார்த்து, அருகிலிருப்பவர்கள் உதவி செய்து வருவதாக கூறினார். மேலும் அவரது கணவர் கடந்த மார்ச் மாதம் ஊருக்கு திரும்பிவிட்டதாக தெரிவித்தார் . தனக்கும், தனது அம்மாவிற்கும் அடுத்த மாதத்தோடு விசா முடிய இருப்பதாகவும், எட்டு மாதமான கர்ப்பிணி பெண்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய அனுமதியில்லை எனத்தெரிவித்தார்.தங்களை சொந்த நாட்டுக்கு அனுப்ப தமிழக அரசு உதவக்கோரி வேண்டுகோள் விடுத்தார்.