February 23, 2019
தண்டோரா குழு
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு மேலும் 100 கம்பெனி துணை ராணுவப்படையினர் ஆகாய மார்க்கமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலால் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. இதனால் இந்தியா மக்கள் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 35-ஏ வை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பிரிவினைவாத இயக்கங்களின் தலைவர்களான யாசின் மாலிக், அப்துல் ஹமித் பயாஸ் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சிலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் பாதுகாப்பை அதிகரிக்க, மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 45 கம்பெனி வீரர்கள், எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த 35 கம்பெனி வீரர்கள், ஷாஸ்திர சீமா பல் படையை சேர்ந்த 10 கம்பெனி வீரர்கள், இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையை சேர்ந்த 10 கம்பெனி வீரர்கள் என 100 கம்பெனி வீரர்கள் ஆகாய மார்க்கமாக காஷ்மீர் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பாதுகாப்பிற்காக ஏற்கனவே 65,000 ஆயிரம் வீரர்கள் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.