January 30, 2019 தண்டோரா குழு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று பேசினால் அது எப்படி குற்றமாகும்? என உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் நடந்த மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. பின்னர் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆலையை திறக்கக்கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்த நிலையில் இது தொடர்பாக மக்கள் அதிகாரம் என்ற அமைப்பினர் உட்பட சிலர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடுத்து இருந்தனர்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேசினால் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.இதையடுத்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
அதில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று பேசினால் அது எப்படி குற்றமாகும்? ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என கூறியவர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? காவல்துறை அறிக்கையை பார்க்கும்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக செயல்படுவதுபோல் தெரிகிறது என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் சரமாரியாக கேள்வியேளுப்பியுள்ளனர்.
மேலும் ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக பேசுவோர் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்து இருக்கிறதா?ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவே மாட்டோம் என்று ஆட்சியர் கூறுகிறார். அப்படி கூறும் ஆட்சியர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்குமா. மக்களை தூத்துக்குடி போலீஸ் கைது செய்வது ஏன். ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக அரசு செயல்படுகிறதா. துப்பாக்கி சூடு வழக்கை சிபிஐ விசாரிப்பதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது ஏன். அரசின் நிலைப்பாடு சரியாக தெரியவில்லை. ஸ்டெர்லைட் பிரச்சனையில் அரசின் நிலைப்பாடு குழப்பமாக உள்ளது. இதுகுறித்து அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வரும் பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது, என்று உச்சநீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.