January 11, 2019
தண்டோரா குழு
உச்சநீதிமன்ற உத்தரவின் படி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி தர வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் நடந்த மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. பின்னர் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆலையை திறக்கக்கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதற்கிடையில் ஆலையை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது.
இதையடுத்து, மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு வழக்கில்
ஆலையை திறக்க கூடாது என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை நிறுத்திவைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஆலையை மூடவேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும் பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடைவிதிக்கவும் மறுப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்தது. இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு 2 கோரிக்கை மனுக்களை வேதாந்தா நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயம் சில வழிமுறைகளை நாங்கள் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. இதனையடுத்து, பசுமைத்தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து தீர்ப்பும் வழங்கியுள்ளது. எனவே, அந்த 25 வழிமுறை மற்றும் பரிந்துரைகளை நாங்கள் பின்பற்ற வேண்டுமானால், ஆலைக்குள் செல்ல எங்களுக்கு அனுமதி தேவை. இதனால், ஆலைக்கு வைக்கப்பட்டுள்ள சீலை தமிழக அரசு உடனடியாக அகற்ற வேண்டும். அதேபோல எங்கள் நிறுவத்திற்கு உடனடியாக மின்சார இணைப்பையும் வழங்க வேண்டும்.
அதுமட்டுமல்லாது, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி ஜனவரி 5ம் தேதியே வேதாந்தா நிறுவனத்திற்கு போடப்பட்டுள்ள சீல் அகற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை அந்த சீல் அகற்றப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த 2 மனுக்கள் மீதும் சட்ட ஆலோசனை கேட்பதற்காக மனுக்களை தமிழக அரசானது, தலைமை வழக்கறிஞர் விஜயநாராயனணுக்கு அனுப்பி வைத்துள்ளளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சட்ட ஆலோசனைக்குப் பிறகு இம்மனுக்கள் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளன.