December 15, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு வழங்கியது.
கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கடந்த மே 22-ந்தேதி வன்முறையாக வெடித்தது. இதனை தொடர்ந்து போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொதுமக்களில் 13 பேர் பலியாகினர்.
கடும் எதிர்ப்பை தொடர்ந்து தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனை எதிர்த்து வேதாந்தா குழுமம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்றது. இதற்கிடையில், தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது ஆலையை திறக்கலாம் என்று மேகாலயா மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு, தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வில் அறிக்கை அளித்தது.
இதை தமிழக அரசு எதிர்த்தது. இது தொடர்பான வழக்கில், அரசு தரப்பில் வாதிடப்பட்டது ‘கடந்த இருபது ஆண்டுகாலமாக சேகரிக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. இதை ஆராய்ந்து பார்த்தால் ஆண்டுக்கொரு முறை நிலத்தடி நீர் மாசு வித்தியாசப்படுவது தெளிவாக தெரியும். ஆலை விவகாரத்தில் ஆய்வு நடத்த ஓய்வு நீதிபதி தலைமையில் உருவாக்கப்பட்ட சிறப்புக் குழுவும் சரியான ஆய்வை மேற்கொள்ள தவறிவிட்டது. ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து தொடர்ந்து வழக்கு விசாரணை நடத்தப்பட்டு, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்று, விசாரணை முடிவடைந்ததை அடுத்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் அடுத்த ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என கடந்த 10ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதில், ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு வழங்கியது. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிமுறைகளை அளிக்கவேண்டும், ஆலையை திறப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆட்சியார் செய்து தரவேண்டும், பாதுகாப்பு அளிக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் காற்று மாசு அடைவதற்கு ஆதாரம் இல்லை என திட்டவட்டமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.