March 31, 2018
தண்டோரா குழு
ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்த அரசு வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் தாமிர உருக்காலையான ஸ்டெர்லைட்டில் இருந்து வெளியாகும் நச்சுப்புகையால் அப்பகுதி குழந்தைகள் மற்றும் மக்கள் சுவாசக்கோளாறு, ரத்தசோகை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குடிநீரும் முற்றிலும் மாசடைந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.இதையடுத்து, மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த ஆலையை மூடக்கோரி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 47 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இப்போராட்டம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அதில், ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களாக அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது எனக் கூறியுள்ளார்.