May 13, 2019 தண்டோரா குழு
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.
பாஜக காங்கிரசுக்கு எதிரான ஒரு பலமான கூட்டணி உருவாக்க சந்திரசேகர ராவ் முயற்சித்து வந்த வேளையில் திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசுவதற்கு பலமுறை நேரம் ஒதுக்க கோரி கேட்டும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் ஸ்டாலின் தவிர்த்து வந்தார்.இதற்கிடையில், பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சென்றார். அப்போது கோபுர வாயிலில் அறநிலையத்துறை சார்பில் மாலை அணிவித்து அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பேட்டரி கார் மூலம் கோவிலுக்குள் சென்ற அவர், அதன் பின்னர் சிறிது தூரம் நடந்து சென்று, சாமி தரிசனம் செய்தார்.
பின்னர், அங்கிருந்து கிளம்பி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்திரசேகர ராவ் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். தேர்தல் முடிவுக்கு பிறகு மத்தியில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக ஸ்டாலினுடன் சந்திரசேகர ராவ் பேசிவருவதாக கூறப்படுகிறது.