December 8, 2020 தண்டோரா குழு
முன்னாள் முதலமைச்சர் குறித்து இனியும் அவதூறு பேசினால் ஸ்டாலினை கோவைக்குள் வர விடமாட்டோம் என்று அதிமுக ஊடக தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் கோவை செல்வராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
அரசியல் பண்பாடு இல்லாமல் ஆ.ராசா மற்றும் ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சரை பற்றி தவறாக பேசி வருகின்றனர். உச்ச நீதிமன்றம் சொல்லாத கருத்தை ஆ.ராசா கூறி வருகிறார். ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடி மோசடி செய்தவர் ஆ.ராசா. 18 மாதம் திகார் சிறையில் இருந்த இவருக்கு எந்த யோக்கியதையும் இல்லை. கலைஞர் டிவி ஆரம்பிக்க மோசடி செய்தவர் கனிமொழி. இவர்கள் தான் லஞ்சம் பற்றி பேசுகின்றனர். தயாநிதிமாறன் மத்திய அமைச்சராக இருந்த போது தொலைத்தொடர்பு நிலையமே வீட்டில் உருவாக்கி மோசடி செய்து பதவியை இழந்தவர். இது ஊழல்கள் இல்லையா? இதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்கிறார்? ஸ்டாலினிக்கு எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தேர்தலை சந்திக்க திராணியில்லை. ஊழலை பற்றி பேசுவதற்கு திமுக.,விற்கு யோக்கியதை இல்லை. இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஸ்டாலினை கோவைக்குள் வர விடமாட்டோம்.
கருணாநிதியின் குடும்பத்திற்கு உதவியவர் எம்.ஜி.ஆர். அந்த நன்றியை மறைந்துவிட்டது திமுக. ஆ.ராசாவுடன் நேருக்கு நேர் விவாதிக்க நான் தயாராக உள்ளேன். கோவை வருவாரா? ரஜினி 6 முறை கட்சி ஆரம்பிப்பதாக கூறியுள்ளார். ஆனால் ஒரு முறை கூட வரவில்லை. ரஜினி வரட்டும் பிறகு பார்க்கலாம். திமுகவை எதிர்க்க எந்த கட்சி நினைத்தாலும் அவர்களுடன் கூட்டணி அமைப்போம் எனக் கூறினார்.