April 24, 2019
தண்டோரா குழு
படித்த இளைஞர்களை குறிவைத்து வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுவரும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கோவை மாநகர ஆனையரிடம் பாமக இளைஞர் அணி சார்பில் மனு அளித்தனர்.
கோவை காந்திபுரம் தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆக்சன் ஸ்கூல் ஆப் மாரிடைம் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் என்ற தனியார் நிறுவனம் கோவை மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் இளைஞர்களை குறிவைத்து வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பெரும் மோசடி நடந்து வருகிறது. இது காலம் காலமாக நடந்து வந்தாலும் தற்போது அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் தனி நபராக புகார் கொடுக்க வந்தால் காவல் நிலையங்களில் புகார் மனுக்களை பெற்றுகொள்வதில்லை. கோவையில் மட்டும் பல நூறு இளைஞர்கள் லட்ச கணக்கில் பணத்தை இழந்துள்ளனர்.
இந்நிலையில்,கோவை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் ஆனையரிடம் புகார் மற்றும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பாமகவின் இளைஞரணி மாநில துணை செயலாளர் அசோக் ஸ்ரீநிதி புகாரளித்த பின் செய்தியாளர்களிடம் கூறும்போது,கோவையை தலைமையிடமாக செயல்படும் பல நிறுவனங்கள் படித்த இளைஞர்களை குறிவைத்து வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுவருவதாகவும் மாநகர ஆனையர் இது போன்ற மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பாதிக்கபட்ட தனி நபர்கள் புகாரளிக்க வந்தால் காவல்துறையினர் மனுவை பெற்றுக்கொள்வது இல்லை எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என குற்றம் சாட்டினர்.
மேலும் இதுமாதிரியான மோசடி புகார்களை விசாரிக்க தனி படை, புகார் அளிக்க தனி தொலைபேசி எண், மற்றும் வாட்ஸப் எண் போன்றவற்றை காவல்துறை ஆனையர் அமைத்து தரவேண்டும்.இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எளிதாக புகார் செய்ய முடியும். காவல் துறைக்கும், அரசாங்கத்திற்க்கும் மோசடி செய்பவர்களின் தகவல் தெரிய வரும் என்று கோரிக்கையும் வைத்தனர். இதில் பாமக இளைஞரணி மாநில துணை தலைவர் ராஜகோபால், சோபியா ராஜேஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.