April 23, 2019 தண்டோரா குழு
வெடிகுண்டை விட மிகவும் சக்தி வாய்ந்தது வாக்காளர் அடையாள அட்டை சிந்தித்து வாக்களியுங்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதல் 2 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதில் இன்று கேரளா (20 தொகுதிகள்), குஜராத் (26), கோவா (2), அசாம் (4), பீகார் (5), சத்தீஷ்கார் (7), கர்நாடகம் (14), மராட்டியம் (14), ஒடிசா (6), உத்தரபிரதேசம் (10), மேற்கு வங்காளம் (5), காஷ்மீர் (1), திரிபுரா (1), தத்ராநகர் ஹவேலி (1), டாமன் டையூ (1) ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதற்கிடையில், பிரதமர் மோடி காந்தி நகர் சென்று தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நிஸான் பள்ளி வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி தனது வாக்கை பதிவு செய்தார்.
வாக்களித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய மோடி,
“ 3-வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. எனது சொந்த மாநிலமான குஜராத்தில் எனது வாக்கினை பதிவு செய்யும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.
கும்பமேளாவில் நீராடிய பின் துய்மை அடைவதை போல், ஜனநாயக திருவிழாவில் வாக்களித்த பின்பு அந்த தூய்மையை நாம் உணரலாம். வாக்காளர்கள் மிகவும் அறிவார்ந்தவகள், எது சரி, எது தவறு என்பது அவர்களுக்கு தெரியும்.தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும் பயங்கரவாதத்தின் ஆயுதம் வெடிகுண்டு, அதேபோல் ஜனநாயகத்திற்கு வலிமை சேர்ப்பது நமது வாக்காளர் அடையாள அட்டை. வெடிகுண்டை விட மிகவும் சக்தி வாய்ந்தது வாக்காளர் அடையாள அட்டை. எனவே நாம் நமது வாக்காளர் அடையாள அட்டையின் வலிமையை புரிந்து கொண்டு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
பிரதமர் மோடி வாக்களிப்பதற்காக ஜீப்பில் வருகை தந்தார். இரு புறமும் நின்ற அவரது ஆதரவாளர்கள் மோடி, மோடி என கோஷம் இட்டனர்.