March 6, 2021 தண்டோரா குழு
சண்டிகாரில் நடைபெற்ற 29 வது வூசு சேம்பியன்ஷிப் போட்டிகளில் சீனியர் பிரிவில் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவிகள் இருவர் வெண்கல பதக்கம் வென்று கோவைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அண்மையில் தேசிய அளவிலான 29 வது வூசு சாம்பியன்ஷிப் போட்டிகள் சண்டிகரில் நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர். இதில் தமிழகம் சார்பாக கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் பயிலும் பூரணி மற்றும் குமரகுரு கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பயிலும் அஹல்யா ஆகியோர் கலந்து கொண்டு மூன்றாவது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளனர்.
தேசிய அளவில் நடந்த போட்டிகளில் வென்று கோவை திரும்பிய மாணவிகள் இருவருக்கும் மாநில வூசு சங்கத்தின் பொது செயலாளர் ஜான்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் கோவை மாவட்ட வூசு சங்கத்தின் தலைவர் கணேசன் தலைமையில் பதக்கம் வென்ற மாணவிகள் பூரணி,அகல்யா ஆகிய இருவரும் கோவை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.அப்போது இணை செயலாளர் ராபர்ட் உடனிருந்தார்.