March 28, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ளவும் தயார் என நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.நவநீதகிருஷ்ணன் ஆவேசமாக பேசினார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. எனினும், இதுவரை வாரியம் அமைக்கப்படவில்லை. இது தொடர்ந்து தமிழக எம்பிக்களும் நாடளுமன்றத்தை முடக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று பேசிய அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் அரசியல் சட்டம் எதற்கு? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டும் என ஆவேசமாக பேசினார்.
இதற்கிடையில் தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த நவநீதி கிருஷ்ணன், காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் மவுனத்தை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. விவசாயிகள் தண்ணீர் இன்றி தவிப்பதை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. அதிகாரப்பூர்வமற்ற விதத்தில் நிறைய சொல்லும் பாஜகவினர் அதிகாரப்பூர்வ எதுவும் செய்வதில்லை. சட்டத்தையும் மக்களையும் மதிக்காத ஆட்சி நடந்து வருகிறது என மத்திய அரசு மீது சரமாரியாக குற்றம்சாட்டினார்.