September 16, 2019 தண்டோரா குழு
கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறைகளை மீறி செங்கல்சூளைகளுக்கு செம்மண் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள புகார் மனுவில்,
கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் முறைகேடாக செங்கல் சூளைகளுக்கு செம்மண் எடுக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. செங்கல்சூளைகளுக்கு விதிமுறைகளை மீறி 50 முதல் 150 அடி ஆழம் வரை செம்மண் எடுக்கப்படுகிறது, அனுமதியில்லாமல் ஏராளமான செங்கல்சூளைகள் இயங்கி வருகிறது. வனப்பகுதிகளை ஒட்டி செம்மண் எடுக்கப்படுவதால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் செங்கல்சூளைகள் இயங்கி வருகிறது. முறைகேடாக இயங்கும் செங்கல்சூளைகளையும், விதிமுறைகளை மீறி செம்மண் எடுப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.