June 17, 2026
தண்டோரா குழு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு காதொலி கருவி (செவிட்டு மெஷின்) அனுப்பி சமூக ஆர்வலர் மணி நூதன முறையில் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
கோவை கலெக்டர் அலுவலகம் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் தினந்தோறும் பச்சிளம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகக் கூறினார். இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து விஜய் முன்பு உரத்த குரலில் கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்டோரின் கதறல்கள் அவரது காதுகளுக்கு எட்டவில்லையா என்ற கேள்வியை எழுப்பினார்.
இதுகுறித்து முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவில், “குழந்தைகள், பெண்கள் மற்றும் பெற்றோரின் வேதனைக் குரல்கள் உங்களுக்கு கேட்கவில்லை என்றால், சமூக நலன் கருதி இந்த காதொலி கருவியை அனுப்புகிறேன். இதன் உதவியுடன் நடிகராகவோ அல்லது அரசியல் தலைவராகவோ மக்களின் குரலுக்கு செவிசாய்த்து உடனடி நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகையாளர்களை கூட சந்திக்காத நீங்கள், நடுநிலையோடு மக்களுக்கு பணியாற்ற முடியுமா?” என்ற கேள்வியையும் மனுவில் எழுப்பியிருந்தார்.
இதையடுத்து, காதொலி கருவியுடன் கூடிய பார்சலை கோவை தபால் நிலையம் மூலம் முதல்வர் தனிப்பிரிவுக்கு சமூக ஆர்வலர் மணி அனுப்பிவைத்தார். இந்த நூதன போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.