September 9, 2019 தண்டோரா குழு
நிலவின் மேற்பரப்பில் சாய்ந்த நிலையில் விக்ரம் லேண்டர் உள்ளது என இஸ்ரோ மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. கடந்த 2-ந்தேதி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க தொடங்கியது. விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் மிகவும் மெதுவாக கடந்த7 ஆம் தேதி தரையில் இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்திருந்தனர்.
அதன்படி, நிலவை நோக்கி பயணித்தது லேண்டர்.ஆனால்,சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பிரிந்து நிலவில் தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தொலைவே இருந்தபோது, தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் விக்ரம் லேண்டருக்குமான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது என இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்தார்.மேலும் என்ன காரணத்தால் இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது குறித்த தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. லேண்டர் விக்ரமின் சிக்னலை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை அடுத்த 14 நாட்களுக்கு தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளோம்.அதில் வெற்றிப் கிடைத்தால் நிலவில் இருந்து தேவையான தகவல்கள் நமக்கு கிடைக்கும். விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை இழந்த ஆர்பிட்டர் கருவி சிறப்பாக செயல்பட்டு நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில்
சுற்றி வந்து கொண்டு இருக்கிறது என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், நேற்று தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரை கண்டறிந்ததாகவும் இஸ்ரோ தெரிவித்தது. இந்நிலையில், கட்டுப்பாட்டை மீறி நிலவில் விழுந்த லேண்டர் உடையவில்லை லேசாக சாய்ந்த நிலையில் நிலவின் மேற்பரப்பில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவில் விழுந்த விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.