October 23, 2020 தண்டோரா குழு
நாளை மறுதினம் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை முன்னிட்டு கோவை தடாகம் ரோட்டில் உள்ள வாழைக்காய் கமிஷன் மண்டி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை தடாகம் ரோட்டில் உள்ள வாழைக்காய் கமிஷன் மண்டி மார்க்கெட்டில் தினமும் வாழைத்தார் ஏலத்தில், சுற்றுவட்டார கிராம பகுதி மற்றும் தூத்துக்குடி,திருச்சி,கரூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார்கள் கொண்டுவரப்படுகிறது. அதனை, உள்ளூர் வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் நேரில் வந்து, குறிப்பிட்ட விலை நிர்ணயித்து வாங்கி செல்கிறார்கள்.
அண்மையில் தென்மேற்கு பருவமழையின் போது, அந்நேரத்தில் வாழை அறுவடை பணி சற்று பாதிக்கப்பட்டது. இதனால், கடந்த மாதம் துவக்கத்திலிருந்து சில வாரமாக மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து குறைவாக இருந்தது. பின் இந்த மாதம் துவக்கத்திலிருந்து வெயிலின் தாக்கத்தால்,உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வாழைத்தார் வரத்து அதிகமானது. இருப்பினும்,சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு,அனைத்து ரக வாழைத்தார்களும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.அதன்படி, செவ்வாழைத்தார் ரூ.800 முதல் அதிகபட்சமாக ரூ.1,350 வரையிலும் ஏலம் போனது.மோரீஸ் அதிகபட்சமாக ரூ.700க்கும், பூவன்தார் ரூ.800 வரையிலும், கற்பூரவள்ளி ரூ.700க்கும், ரஸ்தாளி 650 வரையிலும் கேரள ரஷ்தாளி ஒருகிலோ ரூ.45க்கும் என, கூடுதல் விலைக்கு ஏலம் போனது. அடுத்து சரஸ்வதி பூஜைக்கு முந்திய நாள், சிறப்பு ஏலம் நடைபெறும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.