April 23, 2019
தண்டோரா குழு
கோவை மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இயங்காமல் இருந்த சிசிடிவி கேமராக்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு சரி செய்யப்பட்டது.
கோவை நாடாளுமன்றத்திற்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. 3 அடுக்கு பாதுக்காப்பு வாக்குப்பதிவு மையத்தில் போடப்பட்டுள்ளது. மேலும் மொத்தம் 112 கண்காணிப்பு கேமராக்களும் பொறுத்தப்பட்டு 24 மணி நேரம் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. அரசியல் கட்சி முகவர்களும் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் பெரும்பாலான கேமராக்கள் இயங்கவில்லை என அரசியல் முகவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி வாக்கு பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொழில் நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு, கேமராக்களை சரி செய்யும் பணிகள் நடைபெற்றன. அதனை கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண், கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் ஆகியோரும் நேரில் பார்வையிட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சிசிடிவி கேமராக்கள் சரி செய்யப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ராசாமணி,
வாக்கு எண்ணிக்கை மையத்தில் 100 சதவீத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மழை காரணமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது 112 சி.சி.டிவி கேமராக்களில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் தெரியாமல் இருந்தது. சிசிடிவி கேமராக்களில் அனைத்து காட்சிகளும் பதிவாகியுள்ளது. Data முழுமையாக உள்ளதாகவும் கூறிய அவர், Display மட்டுமே ஆகவில்லை என தெரிவித்தார்.
சி.சி.டி வி கேமரா ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சிசிடிவி கேமரா ஒயர்கள் முழுமையாக மாற்றப்படும் எனவும் அவர் கூறினார்.
மேலும், சூலூர் சட்ட பேரவை இடைத்தேர்தலுக்கு அதிகளவில் பறக்கும் படைகள் நியமித்துள்ளதாகவும், சூலூர் இடைதேர்தலை ஒட்டி கோவை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் தற்போது வரை 3 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.