April 13, 2019 தண்டோரா குழு
கோவை நாடாளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமான அரசினர் பொறியியல் கல்லூரியில், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை, ஆகியவற்றிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரும், கோவை மாவட்ட தேர்தல் அலுவலருமான கு. ராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர் நிலை-1 ஆகியோர்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை இன்று கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள பயிற்சி அளிக்கும் மையமான கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பயிற்சி மையத்தில் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் டெய்ஸிகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர்,
கோவை மாவட்டத்தில் 3,070 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில், தேர்தல் பணிமேற்கொள்ள ஆசிரியர்கள் மற்றும் அனைத்துத்துறை அரசுப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்படும் வகையில், 14,746 நபர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த மாதம் 24-ம் தேதியும், இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 7-ம் தேதியும் நடைபெற்றது. கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளில் மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் உதவி தேர்தல் அலுவலர் கொண்டு இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இத்தேர்தலை பொறுத்தவரையில் நியாயமாகவும், முறையாகவும் நடைபெற தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர் மற்றும் ஒவ்வொரு பணிகளுக்குமான கண்காணிப்பு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 3 நடமாடும் பறக்கும்படை அலுவலர்கள் மற்றும் நிலையான மேற்பார்வை பறக்கும்படை அலுவலர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இன்று வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர் நிலை-1 ஆகியோர்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு, அவர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பயிற்சி மையங்களில் வழங்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.