February 25, 2019
தண்டோரா குழு
லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும், சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மின்வாரியத்தில் உதவி பொறியாளர் நியமனத்திற்கான எழுத்து தேர்வுக்கான கேள்வித்தாள் லீக்கானது. இது தொடர்பாக மதுரை சூர்யாநகரை சேர்ந்த பழனிபாரதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கோபமுற்றதுடன், காட்டமான கருத்துக்களையும் தெரிவித்தனர்.
இவ்வழக்கில் நீதிபதிகள் கூறுகையில்,
” லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். லஞ்சம் வாங்குவோர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும். இதற்கென கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் லஞ்சம் வாங்குவோர் சொத்துக்களை முடக்க வேண்டும். கடுமையான சட்டம் வந்தால்தான் லஞ்சம் வாங்குவது இயல்பான விஷயம் என்பது மாறும். லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும். அப்போது தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும் என காட்டமாக கூறியுள்ளனர்.
இதையடுத்து, இவ்வழக்கை நீதிபதிகள் மார்ச் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.