June 20, 2025
தண்டோரா குழு
கோவை கிணத்துக்கடவு தொகுதியில் உள்ள அரசம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து மாணவர்களின் வசதிக்காக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இன்று (2.06.2025 – வெள்ளிக்கிழமை) திறப்பு விழா நடைபெற்றது.
என்.கே.மகாதேவ ஐயரின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக,கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அப்போதைய கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
தற்போது இந்த அரசு பள்ளியில் ‘அமுத செம்மல் என்.கே.மகாதேவன்’ என பெயரிடப்பட்ட நூற்றாண்டு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இன்று ஜூன் 20 (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 முதல் 4.30 வரை திறப்பு விழா கண்டுள்ளது.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் சந்திர மோகன் கலந்துகொண்டு திறந்து வைத்து பேசியதாவது :-
கோவை அரசம்பாளையத்தில் இன்று 4 வகுப்பறைகள் தனியார் பங்களிப்பு மூலம் கட்டப்பட்டுள்ளது. அனைவருக்கும் நல்ல கல்வி கிடைக்க வேண்டும்.அரசின் சார்பில் கட்டிடம், ஆசிரியர்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் மாணவர்களுக்கு இலவச புத்தகம், ஆடைகள்,காலனி அனைத்தும் இலவசமாக கொடுக்கப்படுகிறது.
மேலும்,அவர்கள் கல்வி கற்க காலையில் சிற்றுண்டி,மற்றும் மதிய உணவு ஆகியவை வழங்கப்படுகிறது.மாணவர்கள் கல்வி கற்க எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்பதற்காக, அரசாங்கம் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் பங்களிப்பு மிகவம் அவசியம். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் எங்களிடம் தெரிவிக்கம் போது எங்களுக்கு சமுதாயம் எல்லாவற்றையும் கொடுத்துள்ளது.நாங்கள் இந்த சமுதாயத்திற்கு எவ்வளவோ சேவை செய்ய கடமைப்பட்டுள்ளோம் என்றனர்.
கோவையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள்,தொழில் முனைவோர்கள் உள்ளனர்.அவர்கள் நாங்கள் மட்டும் உயர்ந்தால் போதாது. எங்களைச் சுற்றி உள்ளவர்களும் வளர வேண்டும் என்று முனைப்புடன் செயல்படுகின்றனர் என்றார்.
இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதற்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது பாராட்டுக்குரியது. தற்போது 122 ஆக உள்ள மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து, முன்மாதிரி பள்ளியாக மாற்றுவோம் என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இது பாராட்டு கூறியது என்று பேசினார்.
மேலும் விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் முன்னிலை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் கிருஷ்ணன், ரோட்டரி மெட்ரொபாலிஸ் சங்கத்தின் தலைவர் வரதராஜன், சங்கத்தின் உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலும் இப்பள்ளியில் பொதுத் தேர்வுக்கு முன் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடக்கும்போது,ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.இதனால் சிறப்பு வகுப்புகளில் அதிகமான மாணவர்கள் பங்கேற்று 400 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியர் அடிக்கல் நாட்டு நிகழ்வில் குறிப்பிட்டு பேசினார்.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நலுனுக்காக ரோட்டரி மெட்ரொபாலிஸ் சங்கம்,ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து இந்தக் கட்டிடம் கட்ட நிதியுதவி வழங்கி, சமுதாயத்தில் சிறந்த பங்களிப்பை ஆற்றியுள்ளனர்.புதிதாக அமைந்துள்ள வகுப்பறை கட்டிடத்தில் ஆய்வுக்கூடம், நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. வகுப்பறைகளுக்குள் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
விழாவில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன் பேசும்போது :
எனது தந்தை பெயர் பள்ளி வருகை பதிவேட்டில் பதிவாகவில்லை,ஆனால் இன்று ஒரு பள்ளி கட்டிடத்திற்கு அவர் பெயர் அமைந்துள்ளது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்றார்.