May 15, 2021
தண்டோரா குழு
ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இதனிடையே ஞாயிற்றுக்கிழமை ரேசன் கடைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் நாகராஜன் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மூலமாக ரூ.2,000 வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து, மே 10 ஆம் தேதி முதல் மாவட்டத்தில் அனைத்து குடிமைப்பொருள் வட்டாட்சியர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலமாக டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி, ரேசன் கடைகளுக்கு மாதத்தில் முதல் 2 வெள்ளிக்கிழமைகளை பணி நாளாகவும், முதல் 2 ஞாயிற்றுக்கிழமைகளை விடுமுறை நாளாகவும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
தற்போது, மே 15 ஆம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 வழங்கிட அரசு அறிவித்து வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஞாயிற்றுக்கிழமையும் ரேசன் கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. மக்கள், அன்றைய தினம் சென்று பயனடையலாம்.
இவ்வாறு ஆட்சியர் கூறினார்.