December 20, 2018
தண்டோரா குழு
ராகுல் காந்தியை இப்போதே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க எந்த அவசியமும் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்த்து எதிர்க்கட்சி ஒருங்கிணைந்து வருகிறது. அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திமுக தலைவர் ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ராகுல் காந்தியை இப்போதே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க எந்த அவசியமும் இல்லை எனக் கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் மாநில தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவை அகற்ற ஓர் அணியில் ஒருங்கிணைந்துள்ளோம். யாரும் தனியாக எந்த முடிவையும் எடுக்க முடியாது, எல்லோரும் சேர்ந்து ஒரே முடிவை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை பற்றி விவாதிக்க நேரம் இல்லை. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம். நான் தனியாக இல்லை, நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம்.
ராகுல்காந்தியை இப்போதே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சி பிரதமர் வேட்பாளர் விவகாரம் குறித்து விவாதிக்கலாம்.