July 16, 2018 
                                ரஜினியுடன் இணைவது குறித்து இதுவரை சிந்திக்கவில்லை எனவும்,இந்த வினாடி வரை எங்கள் இயக்கம் இயங்குவது தான் உண்மை என கோவையில் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
காந்திய மக்கள் இயக்கம் மாநிலப் பொதுக்குழு கூட்டம் கோவை பூமார்கெட் பகுதியில் உள்ள லாரி உரிமையாளர்கள் கட்டிடத்தில்  நடைபெற்றது.முன்னதாக அவ்வியக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர்,
“தமிழகத்தை பொறுத்த வரையில் பூரண மதுவிலக்கு என்பது கனவாக இருப்பது வருத்ததிற்குரியது.   மதுக்கடைகளை அதிகரிக்கும் முயற்சியில் எடப்பாடி அரசு செயல்பட்டு வருகிறதாகவும்,இந்த ஆட்சி 60 நாட்கள் வரை தான் நீடிக்கும் எனவும்,ஆட்சி நீடிக்காது என்று தனக்கு உறுதியான தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.
ஒரு கிழட்டு சிங்கம் போல் தமிழகத்தில் கொண்டு வந்துள்ள லோக் ஆயுக்தா மசோதா இருப்பதாக கூறிய அவர்,ஊழலை பாதுகாக்கவே லோக் ஆயுக்தா அமைப்பை தமிழக அரசு உருவாக்கி உள்ளதாக குற்றம்சாட்டினார்.
ரஜினி கட்சிதுங்கினால் உங்கள் காந்திய மக்கள் இயக்கத்தை அத்துடன் இணைப்பீர்களா என்ற கேள்விக்கு,காலத்தின் தேவை கருதி நடப்பது தான் அரசியல் எனவும்,நாளைக்கு என்ன நடக்கும் என  இன்று முடிவெடுக்க முடியாது,எதுவும் எப்பொழுதும் நடக்கலாம்,இன்று வரை ரஜினியை ஆதரிக்கிறோம்,இணைப்பு குறித்து இதுவரை சிந்திக்கவில்லை என பதிலளித்தார்.
ஓரே நாளில் கட்சி ஆரம்பித்து கோட்டைக்கு போகும்  கற்பனையில் ரஜினி இல்லை என தெரிவித்த அவர்,  கமல் அவசர அவசரமாக கட்சி  துவங்கி, அதில் அடிப்படை கட்டுமானங்கள்  உள்ளது என்பதை  தற்போது தான் கமல் உணர்ந்து உள்ளதாக தெரிவித்தார். திமுக அதிமுக தவிர அனைத்து வாக்கு சாவடிகளிலும்  ஆள் அமர்த்த தமிழகத்தில் வேறு கட்சிகள் இல்லை எனவும்,  ரஜினி கட்சி துவங்க 80% அடிப்படை கட்டுமானப்பணிகள் முடித்துவிட்டார், 20% சதவிதம் மட்டுமே உள்ளது, எனவே  களம் கனியும் நேரத்தில் அரசியல் கட்சி துவங்குவார் என தெரிவித்தார்.
மேலும்,ஸ்டெர்லைட் போராட்டத்தில் தீவிரவாதிகள் புகுந்து கலவரம் செய்தார்கள் எனச் சொல்லக் கூடிய ஆண்மை ரஜினிகாந்திற்கு மட்டும் தான் உண்டு,வேறு எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை என கடுமையாக விமர்சித்தார்.
பா.ஜ.க உடன் கூட்டணி வைக்கும் மனிதராக ரஜினி இதுவரை என்னிடம் கூறவில்லை எனவும்,
காமராஜர் போல,தமிழகத்தில் நல்லாட்சி கொண்டு வர ரஜினியால் தான் முடியும்.51 ஆண்டுகளாக் அரசியலில் வாழ்கையில்,ரஜினியிடம் உள்ள எளிமை மற்ற யாரிடமும் பார்க்கவில்லை எனவும், கலை துறையில் இருந்து வந்தவர்கள் செய்த ஊழலை,கலை துறையில் இருந்து வந்தவர்களால் தான் களைய முடியும்”.இவ்வாறு பேசினார்.