April 12, 2018
தண்டோரா குழு
கோவையை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒரே நேரத்தில் யோகாவில் மூன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
திருப்பூரை சேர்ந்த வைஷ்ணவி என்ற மாணவி கோவை கனியூர் பகுதியிலுள்ள பார்க் குளோபல் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார்.தனது ஒன்பது வயது முதல் யோகாவில் ஆர்வம் செலுத்தி வரும் அம்மாணவி பல்வேறு தேசிய அளவிலான யோகா போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் கின்னஸ் சாதனைக்கான முயற்சியை தான் பயின்று வரும் பள்ளியில் மேற்கொண்ட மாணவி வைஷ்ணவி பார்வையாளர்களை பிரம்மிக்க வைத்தார்.முன்னதாக செலபாஸ் என்று அழைக்கப்படும் மார்பு பகுதியை மட்டும் தரையில் படும்படி உடலை வளைத்து உருண்டபடி சுமார் 13.8 வினாடிகளில் 20 மீட்டர் தூரத்தை அடைந்து புதிய சாதனை படைத்தார்.
இதற்கு முன் 15 வினாடிகளில் எட்டியதே சாதனையாக இருந்தது.அதைபோல்,முக தாடையை தரையில் ஊன்றி ஏற்கனவே 2 நிமிடங்கள் யோகாசனம் செய்யப்பட்ட சாதனையை சுமார் 7 நிமிட நேரம் நிலைத்து யாரும் முறியடிக்க முடியாத புதிய சாதனையை புரிந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.
மேலும்,முறுக்கிய மார்பு நிலையில் பாதத்தை பயன்படுத்தி ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த குடுவைகளில் முட்டைகளை 18.28 வினாடி நேரத்தில் வைத்து கின்னஸ் சாதனை படைத்தார்.ஒரே நேரத்தில் யோகாவில் மூன்று கின்னஸ் சாதனை படைத்த அம்மாணவி மேலும் இரண்டு வகை யோகா முயற்சிகளையும் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.