December 31, 2018 தண்டோரா குழு
ரூ.1 கோடிக்கு இட்லி சாப்பிட்டது யார்? என அமைச்சர் சி.வி. சண்முகம் ஆவேசமாக கூறியுள்ளார்.
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவரது மருத்துவ செலவு கணக்குகளை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது. அதில் சாப்பாடு செலவிற்கு 1.17 கோடி ரூபாய் செலவானது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதமாக கிளம்பியது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம்,
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பது உறுதியாகியுள்ளது. சந்தேகத்திற்கு இடமான மரணம் என வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க வேண்டும். அரசு சிறப்பு விசாரணைக்குழு அமைத்து ஜெயலலிதாவின் மரணத்திலுள்ள உண்மைகளை வெளிக்கொணர வேண்டும். ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை ஏன் செய்யவில்லை? செய்ய வேண்டாம் என சொன்னது யார்?. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எங்களை யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை . ஜெயலலிதாவுக்கு முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் உயிரோடு இருந்திருப்பார்.
மருத்துவமனையை உல்லாச விடுதியாக்கி தங்கி ரூ.1 கோடிக்கு மேல் இட்லி, தோசை சாப்பிட்டது யார், சசிகலா குடும்பம் தான்.
சசிகலா தவிர அவரது குடும்பத்தினர் அனைவரையும் ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார் என கூறினார்.