April 9, 2019 தண்டோரா குழு
மத்தியில் பிரதமர் மோடியின் தலைமையில் ஆட்சி அமைந்தால் தமிழகம் செழிப்படையும் என கோவையில் நடைபெற்ற பா.ஜ.க. பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கோவை பா.ஜ.க.,வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மகேந்திரன் (பொள்ளாச்சி), ஆனந்தன் (திருப்பூர்), தியாகராஜன் (நீலகிரி), ஆகியோரை ஆதரித்து கோவை கொடிசியா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி,
கோவை மாவட்டம் தென்னிந்தியாவின் மான்செஸ்டர். மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என்பதற்காக நாம் இங்கு கூடியுள்ளோம். 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில், தற்போது பிரதமர் வேட்பாளராக மோடி மட்டுமே இருக்கிறார். நாங்கள் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் உறுதியாக வெற்றி பெறுவோம்.கோவை மாவட்டத்தில் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான ராணுவ தளவாட உற்பத்தி மையத்தை கோவையில் கொண்டு வந்து, வேலைவாய்ப்பு அதிகரிப்பிற்கு பா.ஜ.க.வே முக்கியக் காரணம்.
எதிர்க்கட்சியினர் இன்னும் பிரதமர் வேட்பாளரை தேடிக் கொண்டிருக்கின்றனர்.
ஸ்டாலின் மட்டுமே ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக வழிமொழிந்து வருகிறார். எதிர்கட்சிகளின் கூட்டணியில் ஒருமித்த கருத்து என்பது இல்லை.
விவசாயிகளுக்கான மானியம், விவசாயிகளுக்கு முதுகெலும்பாக இருக்கக் கூடிய கோதாவரி – காவேரி நதிகள் இணைப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பா.ஜ.க., அறிவித்துள்ளது. தகுதியான பிரதமர் மோடியின் தலைமையில் ஆட்சி அமைந்தால், தமிழகம் செழிப்படையும்.
இவ்வாறு அவர் பேசினார்.