December 10, 2020 தண்டோரா குழு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
மேட்டுப்பாளையம் நகராட்சியில் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.91.70 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையம் நகராட்சி நில அமைப்புப்படி 6 கழிவு நீர் சேகரிப்பு மண்டலமாக பிரிக்கப்பட்டு, 8 கழிவு நீருந்து நிலையங்கள் மூலமாக 14 இடங்களில் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு சிக்கதாசம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சுத்திகரிப்பு செய்யப்படவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 79.64 கி.மீ தூரம் கழிவு நீர் சேகரிப்பு குழாய்கள், 3319 ஆள் இறங்கு குழிகளுடன் அமைக்கப்பட்டு, 17000 வீட்டு இணைப்பு வழங்கப்பட உள்ளது. கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிகள் 61 சதவீதமும், 8.65 மில்லியன் கனலிட்டர் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள் 83 சதவீதம் முடிவடைந்துள்ளது.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், வெள்ளிபாளையத்தில் அமைந்துள்ள கழிவுநீர் சேகரிப்பு மண்டலத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திட்டப்பணிகளில் மீதமுள்ள பணிகளை மார்ச் மாத இறுதிக்குள் விரைந்து முடிக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இத்திட்டப்பணிகள் நிறைவடையும் பொழுது இந்நகராட்சியில் உள்ள 33 வார்டுகளை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் மிகவும் பயனடைவதுடன், முழு சுகாதாரமான நகரமாக மேட்டுப்பாளையம் நகராட்சி உருவாக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்தார்.
இவ்வாயின்போது வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், வட்டாட்சியர் சாந்தமணி, மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் சுரேஷ்குமார், நகராட்சி பொறியாளர் கவிதா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிசந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.