December 2, 2019 தண்டோரா குழு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.நேற்றிரவு கன மழை பெய்து வந்தது.இந்நிலையில் ஏ.டி.காலனி பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டின் 20 அடி சுற்றுசுவர் இடிந்து அருகில் இருந்த மற்ற நான்கு வீடுகளின் மீது விழுந்தது. இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, அனைவரின் சடலங்களும் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையில், உயிரிழந்துள்ள 17 பேருக்கும் தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இதற்கிடையில், மழைக்காலம் என தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விபத்துக்கு காரணமாக கருங்கல் சுற்றுச்சுவரை கட்டிய வீட்டு உரிமையாளருக்கு எதிராக கொலை வழக்கும் வன்கொடுமை வழக்கும் பதிவு செய்ய கோரியும் பொதுமக்களும் உறவினர்களும் 1000க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இவர்கள் மேட்டுப்பாளையம்- ஊட்டி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீசார் தடியடி நடத்தினர்.
வாக்குவாதத்தின் போது கைகலப்பு ஏற்பட்டதால் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், வீட்டு உரிமையாளர் சிவசுப்பிரமணியன் மீது விபத்தை ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.