May 12, 2021
தண்டோரா குழு
இனி வரும் மூன்று மாதங்களுக்கு ஜிஎஸ்டி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட
வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என காட்மா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில்மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) தலைவர் சிவக்குமார் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வரின் தொழில் சார்ந்த அறிவிப்புகளுக்கு நன்றி. அதே சமயம் மாநில அரசின் வங்கிகள் மூலம் சிறு,குறு தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு ஊரடங்கின் போது மத்திய அரசு சார்பாக பல கடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் வங்கிகளில் செயல்படா கணக்குகளுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகள் கிடைக்க பெறவில்லை.
ஏற்கனவே கடன் பெற்றவர்களுக்கு 20 சதவீதம் கொரோனா பேரிடர் கால கடனாக வங்கிகளால்
வழங்கப்பட்டது. ஆனால் அதிலும் கடன் தவணைகளை 60 நாட்களுக்குப் பிறகு செலுத்திய தொழில் முனைவோர்களுக்கு சில விதியினை காரணம் காட்டி வங்கிகளால் கடன்
வழங்காமல் தட்டிக்கழிக்கப்பட்டது.தொழில் முனைவோர்கள் தங்கள் தொழிலை தொடர்ந்து நடத்திட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் வட்டியில்லாக் கடன்கள் அளிக்கப்பட வேண்டும்.
மேலும் தற்போது கொரோனா தடுப்பு ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் தொழில் முனைவோர் அனைவருக்கும், அவர்கள், தங்கள் வங்கி தவணைகளை செலுத்துவதற்கு
மூன்று மாதம் கால நீட்டிப்பு செய்து கொடுக்கப்பட வேண்டும். அம்மூன்று மாத காலத்திற்கும் அவர்களது கடன் தவணைகளுக்கு எவ்விதமான வட்டியும் வசூலிக்கக் கூடாது.
இனி வரும் மூன்று மாதங்களுக்கு ஜிஎஸ்டி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட
வேண்டும்.
மேலும் அம் மூன்று மாத காலங்களுக்கு எவ்விதமான வட்டியோ அபராதமோ வசூலிக்க படக்கூடாது ஆகிய தொழில் முனைவோர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று தமிழக அரசு நிறைவேற்றி தருமாறு காட்மா சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு சிவக்குமார் கூறியுள்ளார்.