January 7, 2026
தண்டோரா குழு
பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வரும் ஜனவரி 9ம்தேதி நடைபெறவுள்ளது.
கோவை அவினாசி சாலையில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரி தனது 75 ஆண்டுகால சிறப்பைக் கொண்டாடும் வகையில்,பி.எஸ்.ஜி.டெக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஜனவரி 9 ந் தேதி துவங்கி 11 ந்தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இந்நிலையில்,நிகழ்ச்சி குறித்த
செய்தியாளர்கள் சந்திப்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இதில் நிகழ்ச்சிக்கான சேர்மன் டி.நந்தகுமார், கல்லூரி முதல்வர் பிரகாசன், முன்னாள் மாணவர்கள் அமைப்பு தலைவர் வி.கிருஷ்ணகுமார்,ஒருங்கிணைப்பாளர் கே.சுரேஷ்குமார், ரவி செல்வன், அரசு, பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டின் முதல் மாணவர் சோமசுந்தரம் ஆகியோர் பேசினர்.
அப்போது பேசிய அவர்கள்,
மூன்று நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடைபெற உள்ள இதில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பங்கேற்க உள்ளனர்.
குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், துபாய் மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த உலகெங்கிலும் உள்ள முன்னாள் மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.விழாவில் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் காசி கவுண்டன், வேலுசாமி உள்ளிட்டோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைக்க உள்ளனர்.
மூன்று நாட்கள் நடைபெற உள்ள விழாவில்,ஒரு பகுதியாக பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் தொழில்முனைவோர் மற்றும் இளம் முன்னாள் மாணவர்கள், தங்களின் தொழில் துறையில் ஆற்றிய சாதனைகளுக்காக அங்கீகரிக்கப்படுகிறார்கள்.
இந்த விழாவில்,மிஷன் கர்மயோகி பாரத் அமைப்பின் தலைவர் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் ராமதுரை தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்க உள்ளதாக தெரிவித்தனர்
மேலும் ,100 முன்னாள் மாணவர்கள் பல்வேறு துறைகளின் கீழ் தங்கள் நிபுணத்துவத்தை மாணவர் சமூகத்துடன் பகிர்ந்து கொள்கின்றனர்.
அறிவுப் பரிமாற்ற நிகழ்வு’ என நடைபெறும் இதில், தொழில், தொழில்முனைவு, ஆராய்ச்சி, பொது சேவை மற்றும் சமூகத்திற்கு முன்னாள் மாணவர்கள் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறினர்.
மூன்று நாட்கள் நடைபெற உள்ள நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்களை அங்கீகரித்தல், விருதுகள் மற்றும் அறிவுப் பகிர்வு அமர்வுகள் தவிர, குழு விவாதங்கள், கலை நிகழ்ச்சிகள், மாரத்தான், வாக்கத்தான் மற்றும் ஊடாடும் நிகழ்வுகளும் இடம்பெற உள்ளதாக தெரிவித்தனர்.