June 26, 2021
தண்டோரா குழு
சமூகநலத்துறை மூலமாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அனைத்து வகையான நலத்திட்ட உதவிகள் பெறும் பொருட்டு திருநங்கை, திருநம்பி என்னும் அடையாள அட்டை மருத்துவ பரிசோதனையின் அடைப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே மூன்றாம் பாலினத்தவர்களுக்கான புதிய அடையாள அட்டை மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஓய்வூதியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில் வசிக்கும் அடையாள அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களுக்கான அடையான அட்டை பெறும் பொருட்டு தங்களது விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பள்ளி கல்லூரி மாற்று சான்றிதழ் (இவற்றில் ஏதேனும் ஒரு ஆவணம்) மற்றும் 2 புகைப்படம் இணைத்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் சமூகநல விரிவாக்க அலுவலர் மற்றும் மகளிர் நல அலுவலர்களிடம் விண்ணப்பங்களை அடுத்த மாதம் 7ம் தேதி மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்றவர்கள் ஓய்வூதியம் பெற ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.