April 16, 2019 தண்டோரா குழு
மூச்சுக்கு 300 தடவை அம்மா ஆட்சி என சொல்லும் அதிமுகவினர், ஜெயலலிதாவின் வழியில் நடக்கவில்லை என கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை மக்களவை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் இறுதி கட்ட பரப்புரை மேற்கொண்டு வருகிறார். புலியகுளம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், கூட்டணி கட்சியினருடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர்,
பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்தல் அறிக்கையில் ஜி.எஸ்.டி.யை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.எஸ்.டி.யால் எந்த பாதிப்பும் இல்லை என்று மாரி மாரி பேசியுள்ளார். ஜி.எஸ்.டி. தொடர்பாக சி.பி.ராதாகிருஷ்ணன் சொல்வதில் எது உண்மை என்று தெரியவில்லை. வாக்குகளுக்காக சி.பி.ராதாகிருஷ்ணன் பொய் பேசுகிறார். பாஜகவின் பிரதமர் முதல் வேட்பாளர் வரை பொய்யர்களாக உள்ளனர். மூச்சுக்கு 300 தடவை அம்மா ஆட்சி என சொல்லும் அதிமுகவினர், ஜெயலலிதாவின் வழியில் நடக்கவில்லை. மத்தியில் ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பதும், தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராவது உறுதி. கடந்த 5 ஆண்டுகள் மக்கள் அனுபவித்த துன்பங்களை மனதில் கொண்டு வேட்பாளர்களை தேர்வு செய்து வாக்களிக்க வேண்டும். இளம் வாக்காளர்கள் சிந்தித்து வேட்பாளர்களின் தகுதி மற்றும் செயல்பாடுகளை பார்த்து வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.