May 10, 2019 தண்டோரா குழு
கோவையில் திமுக முன்னாள் எம்.பி.ராமநாதனின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
கோவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , திமுக செயல் திட்ட உறுப்பினருமான மு.இராமநாதன் கடந்த இரு வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் மு.இராமநாதன் காலமானார். இந்நிலையில் மறைந்த முன்னாள் எம்.பி.ராமநாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது குடும்பத்தினருக்கும் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர்,
மு.இராமநாதனின் இழப்பு ஈடு செய்யமுடியாத இழப்பு. இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் மிசா காலம் வரை கலைஞரின் உத்திரவினை ஏற்று அனைத்து போராட்டங்களிலும் ஈடுபட்டவர். சட்டமேலவை, சட்டமன்றம் நாடாளுமன்றம் என மக்களின் பிரதிநிதியாக இருந்து மக்கள் பணியாற்றி இருக்கின்றார்.தி.மு.க வின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஓருவர். மு.ராமநாதன் திருமண நிகழ்ச்சி, மாநாடு, கலை நிகழ்ச்சி, கருத்தரங்கம் என அனைத்திலும் திராவிட இயக்க கருத்துகளை பரப்பியவர். இடைவிடாமல் 5 மணி நேரத்திற்கும் மேலாக பேசும் ஆற்றல் உடையவர்.திராவிட இயக்கத்தின், தி.மு.கவின் பல்கலைகழகமாகவும் இருந்தவர். இவரது மறைவு என்பது ஒட்டு மொத்த திராவிட இயக்கத்திற்கும், தி.மு.கவிற்கும் ஏற்பட்ட பேரிழப்பு ஆகும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன் எனக் கூறினார்.
மேலும், திமுக தலைமை நிலைய செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொது செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, சாமிநாதன், பொங்கலூர் பழனிச்சாமி உட்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.