December 29, 2018 தண்டோரா குழு
முத்தலாக் முறையை தடை செய்து, தண்டனைக்குரிய குற்றமாக்கும் மசோதா, வரும் 31 ம் தேதி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம்-2018 ஏற்கனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின் படி ‘முத்தலாக்’ முறையில் மனைவியை விவாகரத்து செய்வது சட்டவிரோதம் என்றும், இதன்மூலம் கணவருக்கு 3 வருடங்கள் ஜெயில் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு, விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு ஜாமீன் வழங்குவது உள்பட சில திருத்தங்களை செய்தது. எனினும் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்படவில்லை. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் இதற்காக சில திருத்தங்களையும் சேர்த்து ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதும் முத்தலாக் அவசர சட்ட மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார் செய்தார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி இந்த மசோதா மீது கடும் விவாதம் நடந்தது. பின்னர் நடந்த ஓட்டெடுப்பில் 245 எம்.பி.,க்கள் ஆதரவுடன் முத்தலாக் தடை மசோதா நிறைவேறியது.
இந்நிலையில், இந்த மசோதா 31 ம்தேதி ராஜ்யசபாவில் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்கிறார். இதனை, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதற்கிடையில், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ள முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
மக்களவையில் நிறைவேறிய முத்தலாக் தடை மசோதாவை மாநிலங்களவையிலும் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், வரும் திங்கட்கிழமை ராஜ்யசபாவில் அனல்பறக்கும் விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.