May 20, 2019 தண்டோரா குழு
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்று இந்த வருடத்தின் முதல் பெண் வன அலுவலராக கோவையை சேர்ந்த இளம்பெண் ஷர்மிளி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வனப்பகுதிகளையும், வன விலங்குகளையும் பாதுகாப்பதில் வனவர், வனக் காப்பாளர், வனக் காவலர்கள் பணிகள் என ஆண்கள் மட்டுமே அதிகம் தமிழக வனத்துறையில் பணியாற்றி வருகின்றனர். தற்போது அனைத்து துறையிலும் சாதித்து வரும் பெண்கள் ஆபத்து நிறைந்த பணியாக கருதப்படும் இந்திய வனத்துறை பணிகளிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு சான்றாக,கோவையை சேர்ந்த இளம்பெண் ஷர்மிளி தமிழக வனத்துறையில் வன அலுவலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாநகாரட்சியில் வருவாய்துறை பிரிவில் உதவி ஆணையராக பணியாற்றும் அண்ணாமலை மற்றும் கல்பனா தம்பதிகளின் மகள் ஷர்மிளி. கோவையை அடுத்த வெள்ளலூரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று பொறியியல் துறையில் பட்டம் பெற்ற இவர், இவரது தொடர் முயற்சியின் காரணமாக அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்று பின்னர் தமிழக வனத்துறையில் வன அலுவலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் வன அலுவலராக தேர்வு செய்யப்பட்ட முதல் இளம்பெண் என்ற சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமது தொடர் முயற்சியின் காரணமாக இந்த இளம் வயதில் இந்த சாதனையை செய்ய முடிந்ததாகவும் இந்திய மற்றும் தமிழக வனத்துறைகளை பாதுகாப்பது அனைவரின் கடமை என்ற நோக்கத்தில் தாம் இந்த பணியை விரும்பி தேர்வு செய்ததாகவும் குறிப்பிட்டார். அவரின் இந்த வெற்றியை பாராட்டி அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவரிக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.